திங்கள், 18 பிப்ரவரி, 2019

தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.





தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.

தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை தேசிய ஆசிரியர் கல்வியியல் விதிகளுக்கு உட்பட்டது. அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன் பி.எட்  முடித்திருக்க வேண்டும் என்பதே இந்த புதிய அரசாணை ஆகும்.
இந்த அரசாணையை பல ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் வரவேறுள்ளனர். மேலும் இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி.

எங்களது கோரிக்கைகள்:
1. 814 கணினி அறிவியல் ஆசிரியர்  காலிபணியிடங்கள் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன, இப்பணியிடங்களுக்கு முறையான  கல்வித்தகுதி அறிவிப்பதில் சிக்கல் நீடித்துவந்தது. இதன் காரணமாகவே இப்பணியிடங்கள் நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது சிக்கல் தீர்ந்து புதிய அரசாணை வந்துவிட்டது. எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுகின்றோம்.

2. அனைத்து அரசு பள்ளிகளிலும் புதியப்பாடத்திட்டத்தில்  6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிவியலில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கணினிஅறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது.கணினி அறிவோடு மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்படும் படி புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளில் மூன்று பிரிவுகளில் கணினிஅறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி  கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

3.  6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிவியலில் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு கணினிஅறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது.இக்கணினி பாடத்தை அரசு 6வது தனி பாடமாக கொண்டுவந்து அதற்கு இளநிலை கணினி அறிவியல் மற்றும் பி.எட் முடித்த பட்டதாரிகளை ஆசிரியர்களாக பணியில் அமர்த்த வேண்டும். அரசு தரப்பில் இருந்து தற்போது இதற்கான போதுமான நிதி இல்லை என்றும் நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி வருகின்றது. எனவே அரசு  53000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு தொகுப்பூதிய அடிப்படையிலாவது பள்ளிக்கு ஒரு கணினி பட்டதாரியை பணியில் அமர்த்த பணிவுடன் வேண்டுகிறோம்.

மேலும் கணினி அறிவியலில் பட்டப் படிப்பை முடித்த இவர்கள் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள  கணினி அறிவியல் பாடத்தையும், கணினி ஆய்வக பயிற்சியையும் மாணவர்களுக்கு திறன்பட கற்றுத்தருவர்.  
விருப்பபட்டு ஆசிரியர் ஆகிவிடலாம் எனும் கனவோடுபடித்த எங்களுக்கு  படித்த படிப்பையும், தகுதியையும், தன்மானத்தையும் அடகு வைத்து வேறு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு.
S.புருஷோத்தமன். M.Sc. B.Ed..,
மாநில இணைச்செயலாளர்.
செல் : 97427 94602.

வியாழன், 20 டிசம்பர், 2018

எம்.சி.ஏ. படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல்படிப்புகள் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல..,

தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றுக்குட்பட்ட கல்லூரிகளில் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ. படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல்படிப்புகள் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெரியார், பாரதியார் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் எம்.காம்., நிர்வாகச் செயலர், எம்.காம்., கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம்., படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.



வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70 சதவீதம் புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும்.ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாகத் தொடங்கப்பட்ட படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59-ஆவது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



ஞாயிறு, 11 நவம்பர், 2018

நவம்பர் 12 நாகை மாவட்டம் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சக்திவேல் வாங்கும் விழாவையொட்டி, நாகை மற்றும் திருமருகல் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நவ. 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோயில் வேல் வாங்கும் விழா நவ. 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை வட்டத்தில், நாகை மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவ. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை, டிச. 1-ஆம் தேதியைப் பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும்.